Subscribe:

Monday, September 12, 2011

எந்தவொரு மதத்தின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோம்: ஒபாமா

இஸ்லாம் மீது மட்டுமல்ல, வேறு எந்த மதத்தின் மீதும் அமெரிக்கா ஒரு போதும் போர் தொடுக்காது என்று அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தொடுத்த போரின் 10வது நினைவு நாள் செப்டம்பர் 11ம் தேதியன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்கியதில் அழிந்து போன இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பிற நினைவிடங்களுக்கும் அவர் போனார்.
கென்னடி மையத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளும் அமெரிக்கர்களிடையிலான உறவுகளை, நட்பை அதிகரித்துள்ளது, மேலும் வலுவாக்கியுள்ளது. எந்தவிதமான அவநம்பிக்கைக்கும், துவேஷத்திற்கும் நாம் பலியாகி விடவில்லை.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் புஷ் கூறியதைப் போல, இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த மதத்தின் மீதோ அமெரிக்கா ஒரு போதும் போர் தொடுக்காது. உலகெங்குமிருந்து பல்வேறு இன, மொழி மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறுகின்றனர். அவர்களுக்கு என்றும் அமெரிக்கா நட்புடன் இருக்கும்.
நம்முடைய பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், பள்ளிகளும், வேலை பார்க்கும் இடங்களிலும் பல்வேறு இன மக்கள் நம்மிடையே இருப்பதைக் காண்கிறோம். அனைவரும் மொழியால், இனத்தால், நிறத்தால் வேறு வேறு நாட்டவர்களாக இருந்தபோதும், நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் அமெரிக்கர்களாக ஒருங்கிணைந்துள்ளோம்.
நாம் அனைவருக்கும் ஒரே கனவுதான். வளமான அமெரிக்கா என்பதுதான் அது. நமது நாட்டை மிகுந்த பாதுகாப்பான நாடாக நமது வருங்கால சந்ததியினரிடம் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நமக்கு மிரட்டல் விடுப்போருக்கு எதிராக நாம் மிகுந்த விழிப்புடன் இருக்கிறோம். நமது பொது பாதுகாப்பில் சில இடையூறுகள் நேரிடலாம். ஆனால் அது நமது பாதுகாப்புக்காகத்தான்.
நாம் கடந்த பத்து ஆண்டுகளாக போர் குறித்தும், அமைதி குறித்தும் விவாதித்து வந்துள்ளோம். பாதுகாப்பு குறித்தும், மக்கள்உரிமைகள் குறித்தும் வாதம் புரிந்து வந்துள்ளோம். இந்த வாதத்தின் இறுதியில் நம்மால் நம்மையும், நம் மக்களையும் பாதுகாக்க முடியும் என்ற திருப்திக்கு நாம் வந்துள்ளோம். அதுதான் நமது பலமும் கூட.
மிகப் பெரிய தாக்குதலை சந்தித்தபோதும் கூட பென்டகன் இன்று மேலும் உயர்ந்த தலையுடன் நிமிர்ந்து நிற்கிறது. ஷாங்க்ஸ்வில்லி மேலும் பலமடைந்து காணப்படுகிறது. நியூயார்க் மேலும் துடி்ப்புடன் செயல்படுகிறது. கலை, கலாச்சாரம், தொழில், வர்த்தகம் மேலும் முனைப்புடன் செயல்படுகின்றன. உலக வர்த்தக மையத்தின் நிழல் இன்று இல்லாமல் போனாலும் கூட வானின் உச்சியைத் தொடும் அளவிலான நம்பிக்கையும், வளர்ச்சியும் அங்கு காணப்படுகிறது.
நம்முடைய மகிழ்ச்சி மேலும் ததும்பி வழிகிறது. நமது ஸ்டேடியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வானுயர்ந்த கட்டடங்களில் நமது மக்கள் பயமின்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். நமது வி்மான நிலையங்கள் முன்பை விட பிசியாக உள்ளன. மிகுந்த நம்பிக்கையுடன் நமது மக்கள் தொடர்ந்து நடை போட்டு வருகின்றனர் என்றார் ஒபாமா.

0 comments:

Post a Comment